தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள மாடியனூரில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆவுடையானூர் பொடியனூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
ஜன்னல் கண்ணாடி
இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும், போதிய கதவுகள் இன்றியும் காணப்படுகின்றன. மேலும் நடைபாதையில் போடப்பட்டிருந்த தல கற்கள் அனைத்தும் பெயர்ந்தும், மேடு-பள்ளமாகவும் காணப்படுகின்றன. இதனால் அங்கு வரும் முதியவர்கள் கால் இடறி கீழே விழும் சம்பவங்களும் அவ்வபோது நடைபெறுகிறது.
மேலும் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டு விஷ பூச்சிகள், பாம்புகள் நுழைந்து இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. கடந்த வாரத்தில் கூட பொதுமக்கள் மருந்துகள் வாங்கும் பகுதியில் சுவற்றில் இருந்த துவாரத்தில் பாம்பு ஒன்று இருந்ததை அங்கு இருந்த நோயாளிகளும், பொதுமக்கள் கண்டு அலறி அடித்து ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
பழுதுகளை சரிசெய்ய வேண்டும்
எனவே ஆரம்ப சுகாதார நிலையம் வரும் நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும், மாடியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் சுற்றித் திரியும் பாம்புகளை வனத்துறை, தீயணைப்புதுறை அலுவலர்கள் மூலம் பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.