அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள குட்டைக்குளத்தின் மேற்கு கரையில் பள்ளி செயல்பட்டு வருகின்ற நிலையில், இக்குளத்தை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் குளத்தில் ஆகாய தாமரை உள்ளிட்ட பல்வேறு செடிகள் மண்டி புதர்போல் காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் மாலையில் வகுப்பறைகுள் கரும்பலகையின் மேல் பாம்பு ஒன்று சுற்றி கொண்டிருந்ததை சில மாணவர்கள் கண்டு கூச்சலிட்டனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து மாணவ, மாணவியர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி தீயணைப்புத் துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பைக்குள் அடைத்தனர். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தண்ணீர் பகுதியை விட்டு கதகதப்பான இடத்தை நோக்கி பாம்பு தஞ்சமடைந்துள்ளது.
எனவே நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி குட்டைக்குளத்தை உடனடியாக தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.