மானாமதுரை அரசு மாணவர் விடுதியின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கயல்விழி மாணவர்களிடம் கேட்டறிந்தார். அருகில் கலெக்டர் ஆஷா அஜீத், தமிழரசி எம்.எல்.ஏ. உள்பட பலர் உள்ளனர். 
உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதுடன் தனித்திறமையையும் வளர்த்து கொள்ள வேண்டும்

சிவகங்கையில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.மாணவர்கள் நல்லமுறையில் படிப்பதுடன், கூடுதலான தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், மானாமதுரை ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர், கழிவறை வசதி, சமையற்கூடம், மாணவிகளின் வருகை பதிவேடு போன்றவைகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் மாணவ-மாணவி களிடம் குறைகளை கேட்ட றிந்து கலந்துரையாடினார்.

அப்போது அமைச்சர் கயல்விழி கூறியதாவது:-

முதலமைச்சர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனை கருத்தில் கொண்டு, மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே திட்டமிட்டு எதிர்கால லட்சியங்கள், தங்களது படிப்பின் நோக்கங்கள் ஆகியன குறித்து முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும். தங்களது குடும்ப சூழ்நிலையை அறிந்து, பெற்றோர்களை மனதில் கொண்டு நல்லமுறையில் படிப்பதுடன், கூடுதலான தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவக்குமார், மானாமதுரை நகர் மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் லதா அண்ணாதுரை மற்றும் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் விடுதி காப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT