உள்ளூர் செய்திகள்

ரேசன் அரிசி, உளுந்து பறிமுதல்: 3பேர் மீது வழக்கு

திருப்பத்தூர் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி, உளுந்து பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகங்கை

தமிழக அரசின் சார்பில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான உணவு தேவைக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இதனை பிற இடங்களில் கூடுதலாக விற்பனை செய்வதற்காக அல்லது தேவைக்காக கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பல்வேறு நிலைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட கீழச்செவல்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் கிட்டங்கியில் அரசின் குடிமைப் பொருட்களான அரிசி 50 கிலோ சிப்பமாக 73 மூட்டைகளும், 40 கிலோ சிப்பமாக 6 மூட்டை உளுந்து என 3 ஆயிரத்து 890 கிலோ அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் அந்த தனியார் குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, மேற்கண்ட குடிமைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. குேடானில் பணியாற்றிய சுப்பிரமணியன், சுரேஷ்குமார், கிட்டங்கி உரிமையாளார் மாரிமுத்து ஆகியோர் மீது குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.