திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள ஆ. தெக்கூர் கிராமத்தில் நகரத்தார்களால் கட்டப்பட்ட 120 ஆண்டு கால மீனாட்சி சுந்தரேஸ்வரரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் முன்பு 5 ஏக்கர் பரப்பளவில் ஊரணி இருந்தது. ஆனால் இந்த ஊரணியைச் சுற்றி வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் ஆக்கிரமித்த தால் தண்ணீர் வரத்து பாதை அடைபட்டு பயன்பாடு இல்லாமல் போனது.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டி 2 ஆண்டுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திற்கும், வருவாய் துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதனை விசாரித்த நீதிபதிகள் ஊரணியை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள அனைத்து பகுதிகளையும் மீட்டெடுத்து ஊரணியை சீரமைக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் துறையினருக்கும் கடந்த 17-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் தலைமையில் ஊரணியின் மேற்குப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மின் விநியோகத்தை தடை செய்தனர்.
மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிடங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஊரணியை சுற்றியுள்ள மற்ற பகுதிகளில் இருந்து வரும் சுமார் 47 குடியிருப்பு பகுதிகளின் உரிமை யாளர்களுக்கு மாற்று இடங்களில் 3 சென்ட் நிலம் வழங்கி, வரும் நாட்களில் அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக ஆக்கிரமிப்பு களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளால் பொன்னமராவதி-திருப்பத்தூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.