சுவாமி வீதிஉலா வந்தபோது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

கொட்டும் மழையில் ஆனந்தவல்லி-சோமநாதரை தரிசனம் செய்த பக்தர்கள்

மானாமதுரையில் கொட்டும் மழையில் ஆனந்தவல்லி-சோமநாதரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். 5-ந்தேதி காலை 7மணி முதல் 7.25மணிக்குள் வைகை ஆற்றில் வீர அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லியம்மன்-சோமநாதர், வீரஅழகர் கோவில் உள்ளது.

சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் அம்மன்-சுவாமி சிம்மம், அன்ன பறவை, கிளி, இரட்டை குதிரை, இரண்டு ரிஷபம், காமதேனு வாகனங்களில் ரத வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நேற்று காலை திருக்கல்யாண நிகழ்ச்சி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இதைதொடர்ந்து இரவு பூ பல்லக்கு அலங்கரிக்கப்பட்டு அம்மன் பூபல்லக்கிலும், சோமநாதசுவாமி பிரியாவிடையுடன் யானை வாகனத்திலும் கோவிலில் இருந்து புறப்பட்டு திருக்கல்யாண கோலத்துடன் வீதிகளில் வலம் வந்தனர்.

அப்போது திடீரென மழை பெய்தது. கொட்டும் மழையில் பக்தர்கள் நனைந்தபடி ஓம்நமச்சிவாயா கோஷம் மற்றும் சங்குநாதம் எழுப்பியும் வழிபட்டனர்.

இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் மானாமதுரை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலை மையில் ஏராளமான போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில் வருகிற 5-ந்தேதி காலை 7மணி முதல் 7.25மணிக்குள் வைகை ஆற்றில் வீர அழகர் இறங்கும் நிகழ்ச்சியும், 6-ந்தேதி வைகை ஆற்றில் நிலாச்சோறு உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.