சதுரங்க விழிப்புணர்வு ரங்கோலி.  
உள்ளூர் செய்திகள்

சதுரங்க விழிப்புணர்வு ரங்கோலி கோலம்

சிவகங்கை மாவட்டத்தில் சதுரங்க விழிப்புணர்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

சிவகங்கை

தமிழகத்தில் முதன்முறையாக தமிழக அரசின் சார்பில் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டிகள் தொடர்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பைச் சேர்ந்த மகளிர் ஆகியோர் கூட்டாக இணைந்து, விழிப்புணர்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி நடந்தது. அதை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் வானதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.