வாய் பகுதி மட்டும் வெளியே தெரியும் நிலையில் உள்ள முதுமக்கள் தாழி. 
உள்ளூர் செய்திகள்

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள், ஈமத்தாழிகள் என்றும் அழைக்கின்றனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வலசை கிராமத்தில் தென்னக வரலாற்று மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், சிவக்குமார், தருனேசுவரன், கமுதி பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் தங்கமுத்து ஆகியோர் களப்பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு மண் மூடியவாறு வாய் பகுதி மட்டும் வெளியே தெரியும் நிலையில் முதுமக்கள் தாழி புதைந்திருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

இந்த கிராமப் பகுதியில் நத்தபுரக்கி செல்லும் தார் சாலையின் காட்டுப் பகுதியில் மழை பெய்து மண் அரிப்பு ஏற்பட்டதால் இந்த முதுமக்கள் தாழி வெளியே தெரிய வந்துள்ளது.

முழுமையாக தரைத்த ளத்தை தோண்டினால் முழு வடிவிலான முது மக்கள் தாழி தெரியும். முதுமக்கள் தாழிகள் என்பது பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள், ஈமத்தாழிகள் என்றும் அழைக்கின்றனர்.

இதைப் பற்றி சங்கப் பாடல்களிலும் குறிப்புகள் உள்ளன. குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி ஐயூர் முடவனார் பாடிய புறநானூற்றுப் பாடல் முதுமக்கள் தாழி பற்றி குறிப்பிடுகிறது.

ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அல்லது உடலை எரித்த சாம்பலை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் தாழியில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். இப்படி புதைக்கப்பட்ட தாழிகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன. உடல் செயலிழந்த முதியவர்களை உயிருடன் புதைக்கவும் இந்த தாழிகள் பயன்பட்டன என்ற கருத்தும் நிலவுகிறது.

மானாமதுரை பகுதியில் பல இடங்களில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதரமாக இவை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.