தருமபுரி:
தமிழ்நாடு வனத்துறை பசுமை போர்வைத் திட்டம் மற்றும் தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாத்தல் மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டத்தில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
மொரப்பூர், அரூர், தீர்த்தமலை வனச்சரகங்கள், அரூர் சமூகக் காடுகள் மற்றும் வன விரிவாக்க விளம்பர சரகம், பாப்பிரெட்டிப்பட்டி சேர்வராயன் வனச்சரகம் ஆகியவற்றின் சார்பில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேலாக மரக்கன்று நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
விவசாய நிலங்கள், தொழிற்சாலைகளில் உள்ள காலி இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பசுமை மயமாக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி தங்களது நிலங்களில் தேக்கு, சிவப்பு சந்தனம், மகோகனி, சில்வர் ஓக், மலைவேம்பு, நாவல், புளியன், ஈட்டி, வேங்கை உள்ளிட்ட வகையான பயனுள்ள மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்யலாம்.
சிட்டா நகல், 2 புகைப்படம், ஆதார் அட்டை நகல் இவற்றுடன் அந்தந்தப் பகுதி வனச் சரகர்கள், வனவர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.