சேலம்:
கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 40).
இவர் கார் உதிரி பாகங்கள் கடை நடத்தி வருகிறார். இவரது உறவினர் மகன் பரணி என்பவரை சேலம் அரியானூரில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் சேர்ப்பதற்காக காரில் அரவிந்த் மற்றும் அவரது பெற்றோரையும் அழைத்து வந்தார்.
கல்லூரி அருகே கார் வந்த போது காரை சாலை யோரமாக நிறுத்தி விட்டு டீ குடிப்பதற்காக அங்குள்ள கடைக்கு சென்றனர். மீண்டும் காருக்கு திரும்பும் போது 6 லட்சம் பணத்துடன் பையை தோளில் மாட்டிக்கொண்டு அரவிந்த் வந்தார்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பணப்பையை பறித்து விட்டு காரில் தப்பி சென்றனர்.
இதனால் செய்தறியாமல் திகைத்த அரவிந்த் மற்றும் உறவினர்கள் சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் உதவி கமிஷனர் ஆல்பர்ட் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பின்னர் அதன் அடிப்படையில் பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடிய அந்த கும்பலை தேடி வருகிறார்கள்.