ஓமலூர்:
ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஆர்.சி.செட்டிபட்டி பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆரோக்கியசாமி, மேரி கிளாரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கோவையில் வசிக்கும் மகனின் குழந்தைகளை பார்க்க சென்று விட்டனர். இந்த நிலையில் நள்ளிரவு ஆரோக்கியசாமியின் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் மாடி வழியாக புகுந்து கதவை உடைத்தனர்.
பின்னர் இரண்டு தளத்திலும் உள்ள 5 பீரோக்களை உடைத்து 50 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர். தொடர்ந்து ஓமலூர் பிருந்தாவன் நகரில் உள்ள வீட்டில் திருட முயன்றனர்.
கோர்ட்டு அருகே உள்ள அர்ஜுனன் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன், அர்ஜுனன் மனைவி அணிந்திருந்த தாலிக்கொடி, கழுத்து செயின் உட்பட 9 சவரன் நகைகளை பறித்தனர். அவரது வீட்டின் அருகில் வசிக்கும் சிலம்பரசன் வீட்டினுள் கொள்ளையர் நுழையும்போது சத்தம் கேட்டு மக்கள் திரண்டனர். அதற்குள் அந்த கொள்ளை கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இந்ததொடர் திருட்டுகள் குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 5 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.