சேலம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த 17 வயது சிறுவனை திருட்டு வழக்கில் திருச்செங்கோடு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து சேலத்தில் உள்ள சிறார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அங்கிருந்து தப்பிஓடிய அந்த சிறுவனை காப்பக நிர்வாகிகளே கண்டுபிடித்து காப்பத்திற்கு மீண்டும் கொண்டு வந்தனர். இந்தநிலையில் அங்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுவனை, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த அவன், சம்பவத்தன்று அதிகாலையில் தப்பி சென்றான்.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்செங்கோட்டில் பதுங்கி இருந்த சிறுவனை கைது செய்து, சேலத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். அங்கிருந்த சிறுவன் மீண்டும் தலைமறைவானான்.
இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். இந்த நிலையில் 3-வது முறையாக தப்பிஓடிய அந்த சிறுவன் நேற்று காலை நாமக்கல் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்ததை போலீசார் கண்டுபிடித்து அவனை கைது செய்தனர்.