தாரமங்கலம்:
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் 21.22.23 ஆகிய தேதிகளில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் முதல் நாளான நேற்று மாலை 5 மணி முதல் பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினர்.
அதன்படி பக்தர்களின் கூட்டம் இருபுறமும் நின்று சூரிய ஒளியை நோக்கி எதிர்பார்த்துக்கொண்டு இருந்த வேளையில் 5.45 மணியளவில் மேற்கில் இருந்து சூரியன் மறையும் வேளையில் ராஜகோபுரம் வழியாக உள்ளே வர தொடங்கியது.
பக்தர்கள் பரவசம் அடைய கொடிமரத்தின் மீது பட்டு முன்மண்டப நந்தியின் கொம்புகளுக்கு நடுவே சென்று கோவிலுக்குள் நுழைந்த ஒளியை கண்டு பக்தர்கள் சிவ சிவா என்று கோஷங்களை எழுப்பி வணங்கினர்.
தொடர்ந்து சென்ற ஒளியானது கருவறை முன்பு அமைக்கப்பட்டுள்ள உண்டியல் வரை வந்து லிங்கத்தின் மீது விழாமல் மறைந்தது. லிங்கத்தின் நெற்றியில் ஒளி விழுவதை காண ஆவலுடன் இருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.