சேலம்,:
ஏற்காடு செல்லும் 4-வது கொண்டை ஊசி வளைவில் கடந்த 5-ந் தேதி சில இளைஞர்கள் மதுபோதையில் ரோட்டின் ஓரமாக நின்று நடனம் ஆடிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவுக்கு புகார் சென்றது.
இதையடுத்து அவர் ஏற்காடு நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அந்த இளைஞர்கள் ஏற்காட்டிற்கு சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஏற்காடு சேர்வராயன் கோவில் அருகில் சென்றபோது, அங்கு மதுபோதையில் நடனம் ஆடிய இளைஞர்களை பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தனியார் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்ததால் அவர்களின் எதிர்காலம் நலன் கருதி வழக்குப்பதிவு செய்யாமல் விடுவித்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்களது பெற்றோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்திக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவர்கள் தங்களது பெற்றோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
அப்போது, மாணவர்களின் எதிர்காலம் நலன் கருதி எச்சரிக்கை செய்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், வரும் நாட்களில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் அறிவுரை வழங்கினர்.