உள்ளூர் செய்திகள்

தகுதிச் சான்றிதழ் இன்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் பறிமுதல்

தனியார் பள்ளிகளில் தகுதிச் சான்றிதழ் இன்றி இயக்கப்பட்ட வாகனங்களை வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தணிக்கை செய்து பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

மேட்டூர்:

மோட்டார் வாகன சட்டம் 56-ன்படி வணிகரீதியில் இயக்கப்படும் இலகு, கனரக வாகனங்களின் தகுதிச் சான்றிதழை ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதுப்பிக்கவேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை செய்து தகுதி சான்றிதழ் வழங்குவார்கள்.

மேட்டூர் பகுதியில் சில தனியார் பள்ளி வாகனங்கள் உரிய தகுதி சான்று பெறாமல் இயங்குவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. 

இதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் அதிகாரிகள் மேட்டூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தகுதி சான்றிதழ் பெறாமல் இயக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் 3 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.