சேலம்:
சேலம் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி சமையலர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில்,
சேலம் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி விடுதிகளில் காலியாக இருந்த 80 சமையலர் பணி இடங்கள் கடந்த 2016-ம் ஆண்டு நிரப்பப்பட்டது.
ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து பழஙகுடியினர் நலத்துறை தனியாக பிரிக்கப்பட்ட பின்பு பழங்குடியினர் நலத்துறையில் 50 சமையலர்களும், ஆதி திராவிட நலத்துறையில் 30 சமையலர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.
பழங்குடியினர் நலத் துறையில் பணிபுரியும் சமையலர்களுக்கு பணி வரன்முறை மற்றும் தகுதி காண் பருவ உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் சமையலர்களுக்கு தற்போது வரை எந்த உத்தரவும் வரவில்லை.
இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு ஊழியராக பணி ஏற்று 6 ஆண்டுகள் ஆகியும், பெரும்பாலான சமையலர்கள் சம்பளம் இன்றியும், பதவி உயர்வு இல்லாமலும் பணி புரிந்து வருகிறார்கள். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்தி துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறி உள்ளனர்.