புதுப்பட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

புதுப்பட்டி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மாலை மலர்

வாழப்பாடி:

வாழப்பாடியில் கொட்டவாடி பிரிவு சாலை அருகே உள்ள புதுப்பட்டி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான பங்குனி இறுதி வாரத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். 

கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று பரவலால் தேர்த்திருவிழா நடைபெறவில்லை. பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தததால், இந்த ஆண்டு தேர்த்திருவிழா நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக சின்னகிருஷ்ணாபுரம் பெரியசாமி மற்றும் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. 

பிரமாண்டமான மரத்தேர் கலைநயமிக்க வண்ண சேலைகளால் அலங்கரிக்கப்பட்டு, நேற்று மாலை, கோவில் வளாகத்தில் இருந்து முதல்நாள் தேரோட்டம் தொடங்கியது. 

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

மீண்டும் இன்று மாலை தேர் இழுக்கப்பட்டு நிலை நிறுத்தப்படும். நூற்றுக்கணக்கான பக்தர்கள், வேண்டுதல் நிறைவேற்றிய அம்மனுக்கு, உடலில் அலகு குத்தியும், பூங்கரகம், அக்னிகரகம் எடுத்தும், உருளதண்டம் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை மஞ்சள் நீராட்டு விழாவும் சத்தாபரண நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.