உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் சொத்துவரி, குடிநீர் வரி செலுத்த வேண்டுகோள்

சேலத்தில் வருகிற 31-ந்தேதிக்குள் பொதுமக்கள் சொத்துவரி, குடிநீர் வரி செலுத்த வேண்டும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 60 கோட்டங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவும், மாநகர பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளுவதற்கும் தேவையான நிதி ஆதாரங்களை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

சூரமங்கலம் உழவர் சந்தை அம்மா உணவக வளாகம், அரிசிப்பாளையம் காமராஜர் திருமண மண்டப வளாகம், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம்,  தொங்கும் பூங்கா வளாகம், அப்புசெட்டி தெரு,  அம்மாபேட்டை மண்டல அலுவலகம், தேர்வீதி மாநகராட்சி பள்ளி வளாகம், நாராயண நகர் எம்.ஜி.ஆர் மருத்துவமனை அருகில்,  

கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம், மணியனூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், ஜாரிகொண்டலாம்பட்டி வார்டு அலுவலகம், தாதகாப்பட்டி வரி வசூல் மையம், கருங்கல்பட்டி அம்மா உணவக வளாகம் என 14 வரிவசூல் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில் வருகிற 31-ந்தேதி வரையிலான அனைத்து நாட்களிலும் வரி இனங்களை செலுத்தலாம்.

எனவே, பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் தாங்கள் செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களையும்  வருகிற 31-ந்தேதிக்குள் செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.