உள்ளூர் செய்திகள்

சேலத்தில் முத்திரைத்தாள் மோசடியில் ஒருவர் கைது.

சேலத்தில் முத்திரைத்தாள் மோசடியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலை மலர்

சேலம்,

பெங்களூருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 49). கார்மெண்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரூ.3 கோடி கடன் தேவைப்பட்டதால் அதற்காக முத்திரைத்தாள் தேவைப்படுவதாகவும், அதற்கு உதவி புரியுமாறு சேலத்தை சேர்ந்த குழந்தைவேலு, மனோஜ்குமார் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூல அலுவலகத்தில் பணிபுரியும் கார்த்திகா என்பவரிடம் தெரிவித்ததை தொடர்ந்து ரூ.8 லட்சம் கொடுத்தால் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள முத்திரைத்தாள் தருவதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மணிகண்டன் ரூ.8 லட்சத்துடன் சேலம் வந்து, கலெக்டர் அலுவலகம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது, கார்த்திகா மற்றும் அவருடன் வந்த 2 பேர் மணிகண்டனிடம் பணத்தை வாங்கிகொண்டு முத்திரைத்தாள் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் சேலம் நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, குழந்தைவேலு, கார்த்திகா, மனோஜ்குமார், முத்து மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் என மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த முத்திரைத்தாள் மோசடி வழக்கில் நேற்று குழந்தைவேலுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.