கோவிலில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட உண்டியலை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்தனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த கோவிலில் 4 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் 3 உண்டியல்களை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறந்து பணம், நகைகள் கணக்கிடப்படும்.  ஒரு உண்டியல் அன்னதான திட்டத்திற்காக   பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை ஒவ்வொரு மாதமும் 25-ந் தேதிகளில் அறநிலையத்துறை அதிகாரிகள் திறந்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து அன்னதானம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோவிலுக்கு வந்த திருடர்கள் கண்காணிப்பு காமிராக்களை  வேறு திசையில் திருப்பி விட்டு உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளனர்.   

அப்போது அன்னதான உண்டியலை தவிர மற்ற 3 உண்டியல்களுக்கும் அலாரம் இணைப்பு கொடுக்கப்பட்டு  இருந்தது. இதனால் அந்த உண்டியல்களை உடைத்தால் மாட்டி விடுவோம் என கருதி  அன்னதான உண்டியலை மட்டும் உடைத்து, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள்  கொள்ளையடித்தனர்.

காலையில் கோவிலுக்கு வந்த பூசாரிகள் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை  கண்டு அதிகாரிகளுக்கும், போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.   சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த அதிகாரிகள்,  கொள்ளையடிக்கப்பட்ட  அன்னதான உண்டியல் கடந்த 25-ந்தேதி திறக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டது. 

இதனால்  தற்போது பெரிய அளவில் காணிக்கை பணம் இருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர்.

அலாரம் இணைக்கப்பட்டு இருப்பதால் மற்ற 3 உண்டியல்களில் உள்ள பணம், நகை தப்பியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த கொள்ளை சம்பவம் குறித்து  அறநிலையத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.