சேலம்:
சேலம் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான 63 சென்ட் நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை சரவணன் மனைவி மலர் மற்றும் அவரது தங்கை உள்ளிட்ட 9 பேர் அபகரிக்க முயற்சி செய்து கடந்த 2018-ம் ஆண்டு சரவணனை ஆயுதங்களால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சரவணன் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சரவணன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் 9 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அப்போது தம்மம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் தற்போது உள்ள இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.
இதனால் வேதனை அடைந்த சரவணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் நீதிமன்ற அவமதிப்பு செய்த காவல் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், முருகேசன் ஆகியோருக்கு 10 மாத சம்பளத்தை பிடித்தம் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்-துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கை வெளி மாவட்ட காவல் துறையினர் விசாரிக்கவும் உத்தரவிட்டார். இதில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தற்போது காரிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.