சேலம்:
தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாநகரில் பணிபுரிந்து வரும் 125 போக்குவரத்து போலீசாருக்கு வெயில் தாக்கம் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்ட தெர்மா கூலால் செய்யப்பட்ட தொப்பிகளை மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மாநகரில் முக்கியமான சாலைகளில் சிக்னலில் வாகனங்களில் காத்து நிற்கும் பொதுமக்களுக்கு வெயில் தாக்கம் ஏற்படாத வகையில் நிழற்குடை அமைக்க ஆலோசித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகரில் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் முக கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் மற்றும் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.