மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரவுடி கார்த்திக். 
உள்ளூர் செய்திகள்

போலீஸ் பிடியில் இருந்து தப்பி ரெயில்வே மேம்பாலத்தில் ஓடிய ரவுடி கால் முறிந்தது

போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க ரெயில்வே மேம்பாலத்தில் ஓடிய ரவுடி தவறி விழுந்தார். இதனால் அவரது கால் முறிந்தது

மாலை மலர்

மேட்டூர்:

மேட்டூர் அருகே உள்ள சாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் கார்த்திக் (வயது 27). 

இவர் மீது வழிப்பறி, கஞ்சா விற்பனை, கொலை முயற்சி உட்பட 7 வழக்குகள் உள்ளது. மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள பிரபல ரவுடி பட்டியலிலும் கார்த்திக் இடம் பெற்றுள்ளார். 

இந்த வழக்கு சம்பந்தமாக கருமலைக்கூடல் போலீசார், கார்த்திக்கை தேடி வந்த நிலையில் மேட்டூர் சிட்கோ பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கருமலைக்கூடல் போலீசார் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டனர்.

அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, அந்த பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் வழியாக கார்த்திக் வேகமாக ஓடினார். அப்போது மேம்பாலத்தில் இருந்து தவறி கார்த்திக் கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் வலியால் அலறி துடித்தார். 

போலீசார், அவரை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.