சேலம்:
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று (19-ந்தேதி) 1,519 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிட்ட உடன் சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்க 21 அணிகள் கொண்ட 63 பறக்கும் படைகள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டது. இந்த பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
விதிமுறைகளை மீறி உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் வெள்ளி, தங்க நகைகள், பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள். சோதனையின்போது பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் காட்சிகள் வீடியோவிலும் தேர்தல் ஊழியர்கள் பதிவு செய்கிறார்கள்.
அதன்படி நேற்று (18-ந்தேதி) நள்ளிரவு வரை பணம் மட்டும் 76 லட்சத்து 83 ஆயிரத்து 77 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.