சேலம்:
சேலம் பழைய சூரமங்கலம் மஜித் தெருவில் உள்ள ஒருவரது வீட்டில் நேற்று இரவு ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து அதனை கடத்த சிலர் சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.
இதைபார்த்த அப்பகுதி பொதுமக்கள், திருநங்கைகள் சிலர் அந்த வாகனத்தை சிறைபிடித்து ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிய நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ஆனால் போலீசார் வருவதற்குள் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்த முயன்ற 2 பேர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டனர். பின்னர் ரேஷன் அரிசியுடன் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதில், 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனால் அதை கடத்த முயன்றவர்கள் யார்? அவர்களுக்கு அரிசி எப்படி கிடைத்தது? என்பது குறித்து சூரமங்கலம் போலீசாரும், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.