பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர், தேவராயசமுத்திரத்தில் எழுந்தருளியுள்ள சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா கடந்த மாதம் இரவு கம்பம் நடப்பட்டு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் திருத்தேரில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. பாதுகாப்பு கருதி திருத்தேருடன் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் சென்றனர்.
நேற்று அழகு போடுதல், அக்னிச்சட்டி எடுத்தல் மற்றும் பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நாளை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், முத்துப்பல்லக்கில் அம்மன் முக்கிய வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவில் பரமத்திவேலூர் டி.எஸ்.பி. ராஜாரனவீரன் தலைமையில் 300- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.