உள்ளூர் செய்திகள்

சேலம் சந்தைப்பேட்டையில் டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கிய 3 வாலிபர்கள்

சேலம் சந்தைப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த டாஸ்மாக் சூப்பர்வைசரை வழிமறித்து 3 வாலிபர்கள் தாக்கினர்.

மாலை மலர்

சேலம்:

சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்த நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 45).  இவர் அன்னதானபட்டி அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சூப்பர் வைசராக பணி புரிந்து வருகிறார்.  

இந்த நிலையில் பச்சமுத்து இன்று   காலை வழக்கம்போல தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்தார். சந்தைப்பேட்டை மேம்பாலம் அருகே வந்தபோது ஒரு கும்பல் அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, தகராறு செய்து,  சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.  

இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மர்ம நபர்கள் அவரது உணவு பையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். 

பச்சமுத்துவுக்கும், அந்த வாலிபர்களுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.  இதனால் பச்சமுத்து தாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. 

இதுகுறித்து  தகவல் அறிந்து அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை  தீவிரமாக  தேடிவருகின்றனர்.