உள்ளூர் செய்திகள்

ரெயிலில் 3 கிலோ கஞ்சா சிக்கியது

சேலம் வழியாக சென்ற ரெயிலில் 3 கிலோ கஞ்சா சிக்கியது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சேலம்:

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

குறிப்பாக ரெயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் ரெயில்களில் ஏறி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கொல்கத்தா சாலிமர்- நாகர்கோவில் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு சேலம் நோக்கி வந்தது. அப்போது, பொம்மிடி-சேலம் இடையே வந்தபோது, சேலம் ரெயில்வே சிறப்பு பிரிவு போலீசார் எஸ்-6 பெட்டியில் சோதனை செய்தனர். 

அப்போது, இருக்கைக்கு அடியில் கருப்பு கலரில் கேட்பாரற்று ஒரு பை கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அதை போலீசார் எடுத்து பார்த்தபோது, 3 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

ஆனால் அதை யார் கடத்தி சென்றார்கள்? என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இதனை தொடர்ந்து அந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.