சேலம்:
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் சிறப்பு வாய்ந்த தலமாகும். 18 சித்தர்களின் தாய் என்றழைக்கப்படும் சுதந்திர சக்தியாக உள்ள சொர்ணாம்பிகை அம்மனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
இந்த கோவிலில் வசந்த நவராத்திரி விழா கடந்த 1ந் தேதி தொடங்கியது. இதையொட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சொர்ணாம்பிகை அம்மனுக்கு தினமும் 10 பாடல்கள் வீதம் மாலை 6.30 மணிக்கு பெண் பக்தர்களால் அபிராமி, அந்தாதி பாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவு விழா நாளை நடைபெற உள்ளது.
இதையொட்டி நாளை (10ந் தேதி) காலை 7 மணிக்கு சுகவனேஸ்வரர் சுவாமிக்கு ஸ்ரீ ருத்ரம் பாராயணம் செய்யப்பட்டு 9 மணிக்கு சங்காபிஷேகம் நடத்தப்பட்டு வில்வார்ச்சணை செய்யப்படுகிறது. மாலை 5 மணிக்கு கோமாதா மற்றும் நந்திகேசுவரர் பூஜை நடைபெறுகிறது.சொர்ணாம்பிகை அம்மனுக்கு புனித தீர்த்தங்களால் 108 லிட்டர் பாலால் அபிஷேகம் நடக்கிறது.
5.30 மணிக்கு சொர்ணாம்பிகை அம்மனிடம் வைத்து பூஜிக்கப்பட்ட அவரது உருவம் பதித்த மகிமை வாய்ந்த 10 ஆயிரம் செம்பு டாலர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த டாலர்களை சுமங்கலிகள் தாலியில் அணிந்து கொள்வதும், ஆயுள் பலம் மற்றும் பிணிகள் நீங்க ஆகியவைகளுக்காக குழந்தைகள் உவகையுடன் அணிந்து கொள்வது வழக்கத்தில் இருந்து வருகிறது.