உள்ளூர் செய்திகள்

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 குழந்தைகளின் தாய் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று 3 குழந்தைகளின் தாய் மண்எண்ணை கேனுடன் திடீரென்று வந்து தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கிருந்த போலீசார் தடுத்தி நிறுத்தினர்.

சேலம்:

சேலம் அஸ்தம்பட்டி கோர்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தேன்மொழி (வயது 27), இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 

இந்த நிலையில்  தேன்மொழி இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மண் எண்ணை கேனுடன் திடீரென வந்து தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் மண்எண்ணை கேனை பிடுங்கியதுடன் விசாரணை நடத்தினர். 

அப்போது தனது கணவர் கண்ணன் மதுகுடித்து விட்டு குடும்ப செலவுக்கு பணம் தருவதில்லை. மேலும் மோட்டார்சைக்கிள் கடனுக்கான மாதாந்திர தவணை தொகையை கட்டாமல் என்னிடம் கட்டுமாறு கொடுமைபடுத்துகிறார். 

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  என்றார். இதையடுத்து அவரை அழைத்து சென்ற அஸ்தம்பட்டி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில்  சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.