பரோட்டாவில் கிடந்த பூரான் 
உள்ளூர் செய்திகள்

பூரான் கிடந்த பரோட்டா சாப்பிட்ட 2 வாலிபர்களுக்கு வாந்தி, மயக்கம்

ஓமலூர் சாலையில் எட்டிக்குட்டை மேடு பகுதியில் உள்ள ஓட்டலில் பரோட்டா வாங்கினர். வீட்டுக்கு சென்று பரோட்டாவை சாப்பிட்டபோது குருமாவில் பூரான் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

எடப்பாடி:

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முரளி கிருஷ்ணன் (வயது 21). இவர் தனது நண்பர் கலையரசனுடன் (20) நேற்று இரவு, கொங்கணாபுரம் - ஓமலூர் சாலையில் எட்டிக்குட்டை மேடு பகுதியில் உள்ள ஓட்டலில் பரோட்டா வாங்கினர். வீட்டுக்கு சென்று பரோட்டாவை சாப்பிட்டபோது குருமாவில் பூரான் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால்அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் கொங்கணாபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கொங்கணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.