சேலம்:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, இவரது மனைவி ருக்மணி ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு அவர்கள், மறைத்து வைத்து கொண்டு வந்த மண்ணெண்னை கேனை எடுத்து தலையில் ஊற்ற முயன்றபோது, போலீசார் தடுத்து கேனை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பழனிச்சாமி கூறும்போது, நாச்சிளாம்பட்டி பகுதியில் எங்களுக்கு சொந்தமான 3 சென்ட் நிலம் உள்ளது. இதை எனது மகன் குமார் எங்களுக்கு தெரியாமல் கையெழுத்து போட்டு அபகரித்துக் கொண்டார்.
மேலும் என்னையும் எனது மனைவியையும் அடித்து துன்புறுத்தி கொலை செய்துவிடுவதாக மிரட்டி வீட்டை விட்டு வெளியேற்றினார். வயதான நிலையில் எங்களுக்கு உணவு, உடை, உறைவிடம் போன்ற எந்த வித வசதியும் இல்லாமல் வீதியில் தவித்து வருகிறோம். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மகன் மீது நடவடிக்கை எடுத்து, எனது நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என மன வேதனையுடன் தெரிவித்தார்