கொண்டலாம்பட்டி:
சேலம் மாரமங்கலத்துப்பட்டி லட்சுமிநகரைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள் கோதைநாயகி (27). இவர் ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலைவாய்ப்பு தேடினார். அப்போது குறிப்பிட்ட ஒரு முகவரியிலிருந்து வேலை தருவதாக கூறி லிங்க் அனுப்பி உள்ளனர். மேலும் அந்த லிங்கை கிளிக் செய்து தகவல்களை அளிக்கும்படி கேட்டுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய கோதைநாயகி அந்த லிங்க்கில் தனது வங்கி விவரங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்தார். அப்போது அந்த பெண் ஆன்லைனில் தெரிவித்தபடி குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கில் 13 லட்சத்து 91ஆயிரத்து 74 ரூபாய் செலுத்தி உள்ளார். அதற்கு பின்பு அந்த நிறுவனத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோதைநாயகி சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.