மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை தரமான சேலைக்கு பெயர் போன ஊர். கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் தரமான சேலைகள் தயார் செய்து வழங்கப்பட்டு வருவதால் தரத்தின் முக்கியத்துவம் கருதி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வாங்கி செல்கின்றனர்.
அதோடு விசைத்தறி தயாரிப்பாளர், நூல் தயாரிப்பாளர், வார்ப்பு ராட்டை தொழிலாளி, நெசவு தொழிலாளி, வாஷிங் செய்பவர், அட்டை அடிப்பவர், டெக்ஸ்டைல் தொழில் செய்பவர் என பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சில வியாபாரிகள் சூரத்திலிருந்து தரமற்ற 2, 3 முறை மட்டுமே உபயோகப்படுத்தக்கூடிய சேலைகளை இறக்குமதி செய்து ரூ.300, ரூ.400 என்று விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்கு இளம்பிள்ளை பகுதியில் சேலை உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து அவர்கள் கூறுகையில் வெளிமாநில தரமற்ற சேலைகளால் பாரம்பரியமிக்க இளம்பிள்ளை சேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தரமற்ற சேலைகளை கொண்டு வந்து விற்பனை செய்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் சேலைகளை வாங்க பொது மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றனர்.