அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் சரோஜா (வயது 60). இவர் நேற்று காலை தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்திருந்தார்.
அந்த சமயத்தில், அவர் வைத்திருந்த ரூ.500 பணம் திடீரென காணாமல் போனது. இது குறித்து அவர் சந்தை நிர்வாக அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (25) என்கிற மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி மூதாட்டி சரோஜா தவற விட்ட பணத்தை சந்தை பகுதியில் வைத்து கண்டுபிடித்து அதனை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
அதனை உதவி நிர்வாக அலுவலர்கள் சிவசங்கர், பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் மூதாட்டி சரோஜாவிடம் ஒப்படைத்தனர். கூலித் தொழிலாளியின் இந்த நேர்மையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.