உள்ளூர் செய்திகள்

ஓமலூர் பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 12 பயணிகளிடம் செல்போன் திருட்டு

ஓமலூர் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பல்வேறு பகுதிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.பஸ்சில் இருந்து இறங்கிய 5 பேரிடமும், பஸ் ஏறிய 7 பேரிடமும் ஒரே நேரத்தில் செல்போன்கள் திருட்டு நடந்துள்ளது. 3 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பல்வேறு பகுதிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் ஓமலூர் பஸ் நிலையம் பல்வேறு பெரு நகரங்களின் இணைப்பு நகராக இருப்பதால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ஓமலூரில் இருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் செல்வதற்காக பஸ் நிலையத்தில் மக்கள் பலரும் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த தனியார் பஸ்சில் இருந்து பலரும் இறங்கி ஏறினார்.

கூட்டல் நெரிசல்

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்சில் இருந்து இறங்கிய 5 பேரிடமும், பஸ் ஏறிய 7 பேரிடமும் ஒரே நேரத்தில் செல்போன்கள் திருட்டு நடந்துள்ளது. 3 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனிடையே செல்போன் திருடப்படு வதை உணர்ந்த ஒருவர் மட்டும் தன்னிடம் செல்போன் திருடிய ஒரு வாலிபரை விரட்டினார். மேலும் செல்போன் திருடிகொண்டு போகிறான் பிடியுங்கள் என்று கத்தியபடியே சென்றுள்ளார்.

போலீசில் ஒப்படைப்பு

இதைகேட்ட பஸ் பயணிகள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதற்குள் அந்த வாலிபர் திருடிய செல்போன்களை மற்ற 2 நபர்களிடம் கொடுத்துவிட்டதாக தெரிகிறது. அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர்.

இதனிடையே பிடிபட்ட வாலிபரை ஓமலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதன் பிறகு தான் தங்களது செல்போனை காணவில்லை என மொத்தம் 12 பேர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தப்பியோடிய 2 பேர் குறித்தும் விசாரணை நடத்திய போலீசார் அவர்களையும் தேடி வருகின்றனர்.A