சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் பச்சியண்ணன் (40). இவர் தேங்காய் நார் ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது செல்போனுக்கு கடந்த 1-ந் தேதி ஓமலூர் போலீசாரால் ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாக எஸ்.எம்.எஸ். வந்தது.
ஆன்லைனில் அதனை டவுன்லோட் செய்து பார்த்தபோது மொபட் ஓட்டும் ஒருவருக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. ஆனால் இவர் புல்லட் வைத்துள்ளார். மேலும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை அவர் ஓட்டவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பச்சியண்ணன் போலீசாரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மனு எழுதிக் கொடுத்தால் அதை சரி செய்து தருவதாக கூறினர். ஆனால் இதுவரை சரி செய்து கொடுக்கவில்லை.
இதையடுத்து அவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்தார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.