உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி வேளாண் அலுவலகத்தில் மானிய விலையில் மண்வெட்டி கடப்பாரை விற்பனை

வேளாண்மை இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது200 கிலோ என்ற அளவில் 50 சத மானியத்தில் 75 டன்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

கடலூர்:

மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பண்ருட்டி வட்டார விவசாயிகளுக்கு கடப்பாரை, மண்வெட்டி, களைக்கொத்தி, பாண்டுசட்டி போன்ற உபகரண ங்களுடன் வரப்பில் சாகுபடி செய்ய உளுந்து விதைகள், ஜிப்சம், ஜிங்க்சல்பேட், தார்ப்பாய்கள் போன்ற வேளாண்மை இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது என பண்ருட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ளநடப்பு வருடத்தில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட வேளாண்மை துறைக்கான நிதிநிலை அறிக்கையில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வேளாண்மை இடுபொருட்கள் மானியத்தில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பண்ருட்டி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் கடப்பாரை, மண்வெட்டி, களைக் கொத்தி மற்றும் பாண்டு சட்டி உள்ளிட்ட வேளாண் கருவிகள் கொண்ட தொகுப்புகள் 357 விவசாய குடும்பங்களுக்கு ஒரு தொகுப்பு ரூ.1500 மானியத்தில் வழங்கப்படுகிறது. 

மேலும் 622 ஏக்கர் நிலத்தில் வரப்பில் சாகுபடி செய்யக்கூடிய வகையில் உளுந்து விதைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. ஜிப்சம் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ என்ற அளவில் 50 சத மானியத்தில் 75 டன்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 374 ஏக்கர் நிலப்பரப்பில் இடக்கூடிய வகையில் ஏக்கர் ஒன்றுக்கு பத்து கிலோ ஜிங்சல்பேட் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. 104 தார்பாய்கள் ஒரு தார்ப்பாய் ரூ.830 மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்து பராமரிக்க கூடிய வகையில் பண்ருட்டி வட்டத்தில் 30,000 மரக்கன்றுகள் ஒரு மரக்கன்று ரூ.15 வீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இதில் தேக்கு, மகாகனி,குமிழ் போன்ற மர வேலைக்கு தகுதியுடைய மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி உழவன் செயலில் பதிவு செய்து பண்ருட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் பெற்று பயனடைய பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.