வருசநாடு:
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே வருசநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட சதுரகிரி மலையடிவாரத்தில் யானைகஜம் அருவி அமைந்துள்ளது.
மழை காலங்களில் இந்த அருவியில் நீர்வரத்து அதிக அளவில் காணப்படும். அதுபோன்ற நேரங்களில் அருவியில் குளிக்க ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு சதுரகிரி மலைப்பகுதி ஸ்ரீவில்லிப்புத்தூர்-மேகமலை புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது.
அதன்பின்னர் யானைகஜம் அருவிக்கு பொதுமக்கள் யாரையும் வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. ஆனால் அதனையும் மீறி சுற்றுலா பயணிகள் சிலர் யானைகஜம் அருவியில் அனுமதியின்றி குளித்து வருகின்றனர். கடந்த வாரம் அனுமதியின்றி குளித்ததற்காக சுற்றுலா பயணிகள் 4 பேருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
மேலும் யானைக்கஜம் பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வருசநாடு வனச்சரகர் சாந்தவர்மன் கூறுகையில், யானைகஜம் அருவி புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ளது.
எனவே வனத்துறையினர் அனுமதி இன்றி பொதுமக்கள் யாரும் யானைக்கஜம் அருவிக்கு செல்லக்கூடாது. அதனை மீறி யானைக்கஜம் அருவிக்கு செல்பவர்கள் மீது வனத்துறை சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.