உள்ளூர் செய்திகள்

வீட்டில் இருந்து வழி தவறி வெளியே சென்ற‌ குழந்தை மீட்பு

குழந்தை அதிகாலை நேரத்தில் திடீரென வீட்டில் இருந்து வழி தவறி வெளியே சென்று விட்டான்.குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை அக்கம்பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடி அலைந்தனர்.

அன்னதானப்பட்டி:

சேலம் ‌தாதகாப்பட்டி கேட் சவுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கணபதி - கங்கா தம்பதி. இவர்களது ஆண் குழந்தை மாறன் (வயது 3). கணபதி, கங்கா இருவரும் தாதகாப்பட்டி உழவர் சந்தை பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று கணபதி முதலில் கடை திறப்பதற்காக சென்றுவிட்டார்.

தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அதிகாலை நேரத்தில் திடீரென வீட்டில் இருந்து வழி தவறி வெளியே சென்று விட்டான். கங்கா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அவர் குழந்தை வெளியே சென்றதை சரிவர கவனிக்கவில்லை.வழி தவறிய குழந்தை சவுந்தர் நகர் பகுதியில் அழுத படியே சுற்றித் திரிந்தான். அப்பகுதியைச் சேர்ந்த யாருக்கும் குழந்தையை அடையாளம் தெரியவில்லை. இதனிடையே குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை அக்கம்பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடி அலைந்தனர்.

தாதகாப்பட்டி கேட் உழவர் சந்தை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அன்னதானப்பட்டி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி அங்கு அழுதபடி நின்ற குழந்தையிடம் சென்று பேச்சு கொடுத்தார். இதையடுத்து அருகில் உள்ள கடைக்காரர்களிடம் விசாரித்ததில் காய்கறி வியாபாரிகள் கணபதி - கங்கா ஆகியோரின் ‌ குழந்தை தான் என்பதை உறுதி செய்து கொண்டார்.பின்னர் குழந்தையை அங்கிருந்து உடனடியாக மீட்டு அவனது பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் இந்த துரித செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

SCROLL FOR NEXT