உள்ளூர் செய்திகள்

வாடகை பாக்கி வைத்த 15 கடைகளுக்கு சீல்

மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவையை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

மாலை மலர்

சேலம்:

சேலம் மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவையை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று சூரமங்கலம் உதவி வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் தமிழ்மணி, வீரக்குமார் மற்றும் அலுவலர்கள் புதிய பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு நீண்ட நாட்களாக வாடகை பாக்கி வைத்துள்ள 15 கடைகளை பூட்டி அதிரடியாக சீல் வைத்தனர்.

மேலும் சில கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வாடகை பாக்கி வைத்துள்ள கடைகள் கண்டறியப்பட்டு பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதன் பின்னரும் வாடகை பாக்கி செலுத்தாததால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என்றனர்.