தென்காசி:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவர் கண்ணையா தலைமையில் தென்காசி மாவட்ட தலைவர் புன்னைவனம் மற்றும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
வீரகேரளம்புதூர் தாலுகா வடபகுதி மற்றும் கீழ் பகுதியில் உள்ள புஞ்சை நிலங்களில் விவசாயிகள் அதிக அளவில் மானாவாரியாக உளுந்து பயிர் செய்துள்ளனர். இந்த ஆண்டில் பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் உளுந்து உள்ளிட்ட பயிர் வகைகள் மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்டவை வறட்சி காரணமாக காய்ந்து விட்டது. எனவே மாவட்ட கலெக்டர் வறட்சி பகுதிகளை நேரில் ஆய்வு செய்து வீரகேரளம்புதூர் தாலுகா கீழ்பகுதி, வடபகுதி மற்றும் சங்கரன்கோவில் தென்பகுதி விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இதில் ஆலங்குளம் ஒன்றிய பொறுப்பாளர் ரவிவர்மன், செங்கோட்டை ஒன்றிய நிர்வாகி ராம்குமார், ஊத்துமலை கிளை தலைவர் நல்லபெருமாள் யாதவ், ஊத்துமலை விவசாயி முத்துப்பாண்டி, அண்ணாமலை புதூர் தங்கபாண்டி, ஊத்துமலை மாடசாமி, பரமையா தேவர் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.