வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி விட்டன. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை இந்த ஆண்டில் 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.
பலத்த மழை காரணமாக நேற்று இரவு 7 மணியில் இருந்து அணைக்கு வரும் நீரின் வரத்து வேகமாக அதிகரித்தது. இதையடுத்து அணையில் இருந்து முதல்கட்டமாக 5,399 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இரவு 8,900 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் தேனி, திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் வைகை ஆற்றில் இறங்கவோ அல்லது கடக்கவோ பொதுமக்கள் முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.