செல்வவிநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்ட அதிகாரிகள்.  
உள்ளூர் செய்திகள்

செல்வ விநாயகர் கோவிலுக்கு சொந்தமான ரூ.37.95 லட்சம் மதிப்புள்ள நிலங்கள் மீட்பு

செல்வ விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலங்களை ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி அளித்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் மேலசித்தர்காடு கிராமம், செல்வ விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நன்செய் வகைபாடுடைய 2.51 ஏக்கர் சென்ட் , புன்செய் வகைபாடுடைய 0.02 சென்ட் பரப்பளவு ஆக மொத்தம் 2.53 ஏக்கர் பரப்பளவு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஆக்கிரமிப்பு நபர்களிடம் மேற்படி நிலங்களைகோயில் வசம் ஒப்படைக்காவிடில் 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் இந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டப்பிரிவு 78-ன் கீழ் ஆக்கிரமிப்புதாரர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கோவில் தக்கார்/ஆய்வாளர் அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் மேற்படி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாகவே முன் வந்து நிலங்களை கோவில் வசம் ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி அளித்தனர்.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா தலைமையில், தஞ்சாவூர் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் சங்கர் முன்னிலையில் கோவில் தக்கார் / ஆய்வாளர் கீதாபாய், சிறப்பு அலுவலர்கள் அசோக்குமார், பிருந்தாதேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கோயில் பணியாளர்களின் மூலம் மொத்தம் 2 ஏக்கர் 53 சென்ட் பரப்பளவு கொண்ட சுமார் ரூ.3795000 மதிப்புள்ள நிலச்சொத்துக்கள் மீட்கப்பட்டது. பின்னர் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு, மேற்படி கோயிலின் சுவாதீனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

மீட்டெடுக்கப்பட்டுள்ளகோயில் நிலங்கள் விரைவில் பொது ஏலத்திற்குக்கொண்டு வரப்படும். இந்து சமய அறநிலையத்துறையின் இது போன்ற கோயில் நிலங்கள் மீட்டெடுப்பு நடவடிக்கை கள் தொடரும் என தெரிவிக்கப்படடன.