ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர், கடந்த 24-ந்தேதி மாடுகளை ஓட்டிக்கொண்டு நிலத்திற்கு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை ஆற்காட்டை அடுத்த தாழனூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் பிரபு பிணமாக கிடப்பதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.