உள்ளூர் செய்திகள்

கல்குவாரி குட்டை நீரில் மூழ்கிய பள்ளி மாணவன் பிணமாக மீட்பு

குளிப்பதற்காக சென்றபோது பரிதாபம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் போராடி பிணமாக மீட்டனர்

மாலை மலர்

ராணிப்பேட்டை:

வாலாஜா அடுத்த அனந்தலை, எடகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகன் கோகுல் பிரசாத் (வயது 14) சென்னையில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கோகுல் பிரசாத் சொந்த ஊரான எடக்குப்பம் கிராமத்திற்கு வந்தார். நேற்று மதியம் கோகுல் பிரசாத் அப்பகுதி நண்பர்களோடு சேர்ந்து கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றார்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்றார். நீச்சல் தெரியாததால் தண்ணீருக்குள் மூழ்கினார். இதை பார்த்த நண்பர்கள் பயந்து போய் கிராம பொது மக்களிடம் தெரிவித்தனர்.

வாலாஜா போலீஸ் நிலையத்திற்கும், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குட்டையில் மூழ்கிய சிறுவனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரமாகியும் மாணவன் கிடைக்காததால் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தண்ணீர் குட்டையில் இறங்கி தேடுதலில் ஈடுபட்டனர்.

சில மணி நேர தேடுதலுக்கு பின்னர் நீரில் மூழ்கி கிடந்த மாணவனை பிணமாக மீட்டனர்.

தொடர்ந்து மாணவன் உடலை கைப்பற்றிய வாலாஜா போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.