உள்ளூர் செய்திகள்

கடலாடி அருகே சாலையை சீரமைக்க கோரிக்கை

கடலாடி அருகே சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மேலச்செல்வனூர் ஊராட்சிக்குட்பட்ட தேரங்குளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் உள்ளனர். இந்த கிராமத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை தற்போது சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் வந்து செல்ல மறுப்பதால் சிகிச்சை பெற முடியாமல் 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனங்கள் இந்த சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

இந்த பகுதியில் பஸ் வசதி கிடையாது. கடலாடியில் இருந்து தேரங்குளம் கிராமத்திற்கு செல்ல 5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது இரவு நேரங்களில் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் கிராமத்திற்கு செல்ல மறுத்து வருகின்றனர். அதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தற்போது வரை சாலையை சீரமைக்கவில்லை. விரைவில் சாலையை சரி செய்யாத பட்சத்தில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைத்து போராட்டம் நடத்தப் போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT