ராமேசுவரம்
ராமேசுவரத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. மழை நீண்ட நேரம் பெய்ததால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்து விட்டது. குளம் போல் மழை நீர் தேங்கியதால் அதனை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் பணியாளர்கள் விரைந்து வந்து மழைநீரை வெளியேற்றினர். ராமேசுவரத்தில் அதிகளவு மழை பெய்யும் போது கோவிலுக்குள் தண்ணீர் குளம் போல் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய சிரமம் ஏற்படுகிறது. எனவே கோவிலுக்குள் மழைநீர் தேங்காமல் இருக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.