உள்ளூர் செய்திகள்

தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை

கீழக்கரையில் தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஒவ்வொரு நகராட்சி கூட்டத்திலும் வரவு- செலவு கணக்குகளை வார்டு கவுன்சிலர்களுக்கு முறையாக காண்பிக்க வேண்டும்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். கமிஷனர் செல்வராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

துணைத் தலைவர் ஹமீது சுல்த்தான்:-

ஒவ்வொரு நகராட்சி கூட்டத்திலும் வரவு- செலவு கணக்குகளை வார்டு கவுன்சிலர்களுக்கு முறையாக காண்பிக்க வேண்டும். அதை விடுத்து விட்டு எப்போது கேட்டாலும் பின்னர் தருகிறேன் என்று சொல்லி அதனை காட்டாமல் இருப்பது சரியல்ல.

இதுகுறித்து பலமுறை பேசியும் பயனில்லை. வார்டு குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி கூட்டத்தில் கூறினாலும் சரி செய்யப்படுவதில்லை.

பாதுஷா (சுயேட்சை):-

நகராட்சியில் முன்வைக்கப்படும் தீர்மானங்களை நிறைவே ற்றாமல் மெத்தனப் போக்கை அதிகாரிகள் கடைப்பிடிக்கின்றனர். பொதுமக்களின் பிரதிநிதிதியாக இருந்து குறைகளை நிவர்த்தி செய்வதற்கு மட்டுமே இக்கூட்டம் நடைபெறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சேக் உசேன் (சுயேட்சை):-

கீழக்கரை வடக்குத்தெருவில் தார்சாலை முறையாக அமைக்காததால் தரமற்று உள்ளது. கமிஷனர் ஆய்வு செய்ய வேண்டும். கவுன்சிலர்களின் கேள்விக்கு முறையாக பதில் சொல்லி பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணைத்தலைவர்:-

கேரளாவில் இருந்து கீழக்கரை நகருக்குள் தினமும்அதிக எண்ணிக்கை யில்சுற்றுலா பஸ்கள், வாகனங்கள் வருகிறது.

இதனால் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து தடைபடுகிறது. இதில் தீர்வு காண போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சி தலைவர்:-

கீழக்கரை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கேரள வாகனங்கள் பிரச்னை தொடர்பாக போலீசாருடன் கலந்து பேசி பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

சப்ரஸ் நவாஸ்:-

கீழக்கரையில் உள்ள வார்டுகளில் மற்ற நகராட்சிகளில் குடிநீர் வழங்குவது போன்று லாரிகள் மூலமாக குடிநீர் சப்ளை செய்வதற்கு முன்வர வேண்டும்.

நகராட்சி தலைவர்:-

நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பொதுக்குழாய்கள் 39 உள்ளது.

இவற்றில் 15 பயன்பாட்டில் இருக்கிறது. மீதமுள்ள 24 குழாய்கள் ஆய்வு செய்யப்பட்டு ஒரு மாத கால அவகாசத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.