அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி, வானம் பார்த்த பூமி, காட்டு கருவேல மரங்கள் நிறைந்த மாவட்டம் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் அபிராமம் பகுதியில் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மரங்கள் வளர்க்க அபிராமம் பகுதி சமுக ஆர்வலர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையான சூழலை உருவாக்க கலெக்டர் ஜானிடாம் வர்கீசை தலைவராக கொண்டு மாவட்ட வன அலுவலர் பகான் ஜக்தீஸ் சுதாகர் தலைமையில் பசுமை அமைப்ப்பு அமைக்ககப்பட்டுள்ளது.
இதில் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை, அனைத்து கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இந்த அமைப்பு மூலம் 2023-ல் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மரங்களை வளர்த்து ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு புங்கன், பூவரசு. புளி மற்றும் மாதுளை, சீதா நெல்லி, வேப்பம் மரம் ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட மரங்களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக அமைப்புகளும் செயல்பட அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதையே அழைப்பாக ஏற்று அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சமூகப்பணி செய்துவரும் அபிராமம் பகுதி சமூக சேவை அமைப்பு மற்றும் இளைஞர்கள் தங்கள் பகுதியில் முனைப்பு டன் செயல்பட்டு காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மரங்களை நட்டு அபிராமம் பகுதியை பசுமை பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.